பக்கங்கள்

புதன், 29 டிசம்பர், 2010

கடவுள் என்பவன் யார்?



கடவுள் என்பவன்
யாரென் றறிய
யாரைக் கேட்பேன் அறியவில்லை! - சரி
கடவுச் சீட்டு
தருபவன் யார்தான்
எங்கிருந் தென்றும் புரியவில்லை!

இசைபட ஒலிக்கும்
இன்பமுங் கொடுக்கும்
கருவியில் நாதம் எவ்வாறோ-நம்
வசைகளைப் போக்கும்
வடிவமும் மறைத்த
கடவுளும் உள்ளான் அவ்வாறே!


விண்ணையும் மண்ணையும்
விளையாட் டாய்சிறு
விளக்காய்க் காப்பதும் இறைவனென்றால்-அம்
மன்னவன் மக்களை
மாண்புற உலகினைக்
காக்க மறந்தே அழிப்பதுமேன்?

உலகினை உருக்கி
உயர்வாய்க் கொடுத்த
உத்தமன் என்றும் நல்லவனே-நிதம்
அலகினில் சிக்கிய
இரையாய் அதனை
அழித்தொழிப் பதுவும் மானிடனே!


கேள்விக ளனைத்தும்
கிளம்பும் நொடியில்
பதிலாய் மூளையில் தருவதுயார்-பொன்
தூள்களைப் போலே
என்னுள் பரவி
துயர்விடும் பதிலினைத் தருவதும்யார்?

நீரினைக் கொழிக்கும்
நிலத்தினில் பரவும்
நெடுமரம் தன்னிலும் உயிராக-அதன்
வேரென் றிருந்து
விழுதுகள் செழிக்க
வைத்திடும் இறைவன் அவனேதான்!


உன்னிலும் இருந்து
உயிரையும் இயக்கி
ஒருநொடி கேள்வியென் றாகிடுவான்-பின்
கண்களை இமைக்கும்
கணத்தில் பதிலாய்
கடவுள் அவனே உரைத்திடுவான்!

நன்மையும் அவனே
தீமையும் அவனே
நாயகன் அவனே நம்மிறைவன்-கேள்
உன்னிலும் அவனே
என்னிலும் அவனே
ஊனுயிர் உலகும் அவனேதான்!

*
இது ஒருவகை இசைப்பா..!
நன்றிகள்!

புதன், 11 ஆகஸ்ட், 2010

தர்மம் என்றொரு தெய்வம்!

*
பாவ சூனியம் போக்கியே
பாவி நல்லவர் ஆக்கியே
தேவன் குன்றினில் சேர்த்திடும்
காவல் தெய்வமே தர்மமாம்!

தேடித் திண்ணலாம் யாவுமே!
மாடி வீட்டிலும் வாழலாம்!
வாடி நின்றிடும் போதிலே,
ஓடிச் செய்திடு நன்மைகள்!

வண்ண வண்ணமீன் வானிலே
சின்னக் கண்களால் நோக்கிடும்
எண்ணம் கூடியே தேங்கிடும்
வன்னம் காலையில் ஓடிடும்!

நீரின் கோலமே வாழ்க்கையாம்
பாரின் நாட்களும் கொஞ்சமாம்..
ஊரில் சிற்றிடம் வேண்டினால்
தேறு புண்ணியம் தேற்றிடு!

நன்றிகள்!

*இப்பா தேமா + கூவிளம் + கூவிளம் எனும்படி அமைந்த
வஞ்சிமண்டிலம் வகையைச் சார்ந்தது.

சனி, 3 ஜூலை, 2010

சாகாத வரம்வேண்ட!

*
சாகாத வரம்வேண்ட சமுத்திரமாய்ப் புகழ்வேண்ட
ஆகாவென் றனைவருமே அருமையென வாழ்த்திடவே
போகாத ஒருவாழ்க்கை பொருளோடு வேண்டுமெனில்
ஆகாத செயல்துடைத்து அருஞ்செயல்கள் புரிந்திடுவீர்!

பொன்னும்நல் மணியெதுவும் போகுமிடம் தெரியாது
சொன்னவைகள் யாவுமுந்தன் சொல்படியே நடக்காது
பண்ணதுவே அவனையெண்ணி பாடிக்கொண் டிருந்தாலே
எண்ணமது ஓர்நாளில் ஈடேறும் இதுதிண்ணம்!

செவ்விளநீர் நிறத்தொப்ப சிறப்பான வாழ்க்கையிதில்
அவ்விளநீர் வேண்டுமாயின் அறம்மட்டும் புரிந்திடுவீர்
அவ்வையொடு தமிழ்நூல்கள் அளித்திட்ட படிவாழ்ந்து
கவ்வைநீக்கி துன்பமிலாக் களிப்பதனை அடைந்திடுவீர்!

நன்றிகள்!


*இப்பா கலிமண்டிலம் வகையைச் சார்ந்தது.

வெள்ளி, 28 மே, 2010

வேண்டாம் மதுவாம்..!

-
கனவில் வந்திடும் மதுவினைக் கொஞ்சம்
....கலந்து இன்புறக் களித்திட நாளும்
மனனம் செய்திடும் மனதினை ஒருநாள்
....மறந்து மண்ணினில் வாழ்ந்திடும் வரத்தை
நினைந்து உன்னைநான் நித்தமும் கேட்பேன்
....நிகழ்த்து அற்புதம் நிறுத்திடு இதனை
புனைந்து வைப்பவர் யாரென அறியேன்
....புத்தி நற்பெற புத்திரர்க் கருள்வாய்!

தொலைக்க சென்றிடும் துயரெலாம் பறக்கும்
....தொகையும் நன்றென வீட்டினை அடையும்
அலைக்க ழித்திடும் விதியினைக் கடந்து
....அளவில் லாதொரு இன்பமும் சேரும்
கலைக்க வேண்டுமே மதுவெனும் பேயை
....குடும்பம் இன்முகம் அழகுறக் காணும்
நிலைத்து நின்றிடும் நம்திரு யாவும்
....நீரை நீக்கிட முனைந்திடும் பொழுதே!

-

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

கல்தோன்றி மண்தோன்றா!


*
நல்லோர்க்கு மட்டுமிங்கே துன்பம் ஏனோ..
நாள்தோறும் வல்வினைகள் கொள்தல் ஏனோ..
வல்லோர்கள் எந்நாளும் வலுத்தல் ஏனோ..
வல்லூற்றால் குருவிகளும் சாதல் ஏனோ..
வலிமைகொள்ப வன்மட்டும் வாழ்தல் என்றால்
வாழவைக்கும் சாமியெல்லாம் உண்டோ இங்கே..
கலிமுற்றிப் போனதுவே காலம் வற்றி
கல்தோன்றா மூத்தகுடி கரைதல் காணீர்.!


நன்றி!

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இறை வழிபாடு!


*
உருவம் இன்றி உலகினிலே
....ஒத்து நடக்கும் செயல்களிலே
அருவம் போலே அமைவான்காண்
....அவனே தெய்வம் எனக்கொண்டான்
ஓரேர் உழவன் போலேயாம்
....ஒருவழி நெறியிற் செல்கையிலே
பாரேர் பிடித்து உழுதிடுவோன்
....பதராம் எமையுங் காப்பானே!

திருமால் அல்லா ஏசுவொடு
....திருப்பு கழ்பை பிள்குரானும்
அருகாய் வரட்டும் அனைவருமே
....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்
இரும்பால் ஆனது அல்லமனம்
....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்
உருவாக் கியவன் மனிதன்தான்
....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!

நன்றி!

வியாழன், 1 ஏப்ரல், 2010

இயற்கையின் இனிமை கேளீர் !


*
அன்ன மென்நடை காணோம்
....அச்சிறு பொட்டினைக் காணோம்.
சின்னக் கொடியிடை காணோம்.
....சேலைகள் எங்குமே காணோம்.
வன்னக் குழல்சடை தரிக்கும்
....வான்கரு மேகமுங் காணோம்
தின்னத் தின்னவே தெவிட்டாத்
....தீஞ்சுவைத் தமிழையுங் காணோம்!

மின்னும் பலவுடை பூட்டி
....மேலுடல் கீழுடல் காட்டி
நன்னும் தமிழ்உடை, செய்கை
....நடத்தையும் பேச்சையுந் தொலைத்தே
மன்னும் தமிழ்க்குடி அழித்தே
....மேலைநாட் டினரெனத் துடிப்பீர்
நன்றென் ஒருசொலைக் கேளீர்.
....நாடுக பண்புறு வாழ்வே!

முன்பந் நாட்களி லுரைத்த
....முன்னவர் மூடரு மல்லர்.
பின்ன வரிவரில் யாரும்
....பெரிதொரு அறிஞரு மல்லர்.
தென்ன வர்குடி நாளும்
....தழைத்திடத் தாங்கியே நிற்பீர்
அன்ன வர்வழி நடந்து
....அறத்தினைக் காத்திடப் புகுவீர்!
-

தமிழர் நிலை !


*
டாரம் கொண்டான் ஒருவன்
...கலிங்கம் வென்றான் ஒருவன்
படாது பகையை விரட்டிப்
....பாரில் எங்குஞ் சென்றான்
விடாது தொழில்கள் செய்து
....விளக்காய்த் தமிழை வளர்த்தான்
தொடாது தொல்லை நீக்கி
....தோல்வி எனுஞ்சொல் போக்கி

இமயம் வரையில் சென்று
....எட்டுத் திக்கும் பரந்து
சமயம் தமிழாய்க் கொண்டு
....சாதி மதங்கள் துறந்து
கமலம் போலே மணந்த
....காலம் இனிமேல் வருமா?
இமையில் நனையும் கண்ணீர்
....இனிவி ழிப்பும் வருமா?
-

தமிழ்! தமிழ்! தமிழ்!


*
உறுபகை அழிதல் வேண்டின்
....ஊழ்வினை கழிதல் வேண்டின்
அறுமுகன் அருளும் வேண்டின்
....ஆனவை அருகில் வேண்டின்
வரும்பிணி யாவும் போயே
....வாழ்க்கையுஞ் செழிக்க வேண்டின்
கரும்புகை படிந்த நெஞ்சில்
....களங்கமில் ஒளியும் வேண்டின்..

மனத்தினில் தமிழை என்றும்
....மலையென வணங்கிப் போற்றி
வனப்பினில் உயர்ந்த தேனை
....வாய்தனில் உரைத்து வாழ்வில்
தினம்புரி செயல்கள் யாவுந்
....தீந்தமி ழாலே கூறி
அனல்மிகு தொல்லை போக்கி
....அருளுடை வாழ்வை வாழ்வீர்.!

நன்றி!

செவ்வாய், 16 மார்ச், 2010

தமிழே !



சொந்த மொருவரு மில்லை!
....சொல்லிடத் தகுவது மில்லை!
தந்த அழகினை உரைக்க
....தரையினில் உறவெனக் கில்லை!
எந்தன் மனத்தினை யாளும்
....இணையிலா மொழியென வாழும்
இந்தி ரவுலகும் போற்றி
....ஏத்திட விளைந்திடு தமிழே..!

சந்தச் சுவைமிகுந் தூறும்
....சந்தனக் கனிகளின் சாறும்
எந்தக் காலமும் ஆளும்
....எத்திசை நோக்கினும் வாழும்
நிந்தன் துணையொடு நானும்
....நித்தமும் வாழ்ந்திடல் வேண்டும்!
வந்தென் நாவினில் அமர்ந்து
....வழங்குக பாக்களைத் தாயே.!

--

தமிழ்த்தாய்..!



தமிழைப் பருகித் தமிழைப் பருகித்
தவித்துப் போகின்றேன்!
உமிழ்நீர் சுவையும் ஊறும் அமுதும்
தேனுங் கசப்பாகும்!
உமையாள் பாதி உடையார் போலே
உன்னால் வலிவுற்றேன்!
எமையாள் பவளே எந்தாய் நீயே
எவர்க்கும் இறையானாய்!

--

தமிழே போற்றி..!


கந்தன் நகையினிற் பிறந்து
காலவே கத்தினில் வளர்ந்து
சந்தம் ஆயிரம் புனைந்து
சாவினைத் தூக்கியே எறிந்து
அந்தம் ஆதியும் அற்றே
அலைகடல் போலுரு வெடுத்துத்
தந்தத் தூய்நிற மாகித்
தரணியை ஆண்டிடுந் தாயே!
"

காதல்..!!காதல்..!!காதல்..!!



காதல் - 1

காதல் கொண்டிடக் கண்களின் மணிகளுங்
கனவுக ளிறைத்தல்காண்!
காதல் கொண்டிடக் காண்பவை அழகுடன்
காட்சியாய்த் தெரியுங்காண்!
காதல் கொண்டிடக் கடினமும் எளிதெனக்
கருத்தினில் தோன்றுங்காண்!
காதல் கொண்டிடக் கனவுகள் கிளைத்திடக்
கதவுகள் திறக்குங்காண்!

காதல் - 2

காதல் கொண்டிடக் கவலைக ளொழிந்து
கதவுகள் திறக்காதோ!
காதல் கொண்டிடக் கதிரவ னொளியென
கண்களு மொளிராதோ!
காதல் கொண்டிடக் கருத்தினி லினிதெனக்
கவிகளும் முளைக்காதோ!
காதல் கொண்டிடக் கலகமும் தீர்ந்துபின்
கனவுகள் இனிக்காதோ!

திங்கள், 1 மார்ச், 2010

மது...!!


உண‌ர்விழந் தொருவாய்ச் சோற்றையும் மலத்தையும்..
புணர்ந்தாலு மறியாது புத்தியும் பேதலித்துக்..
கொணர்ந்து தருமெமக் கயிற்றைமிகப் பிடித்து..
மணந்து கொள்ளச் செய்யு மது..!!
----------
நண்பர்களே..!! தயவு செய்து மதுவைத் தவிருங்கள்...!!
நன்றி..!!

அன்பன்.,
க.அண்ணாமலை.,

கேள்..!! மனமே..!! கேள்..!!


சந்திக்குஞ் சமயத்திற் சிந்திக்க மறந்துஅஞ்சி
நிந்திக்கும் அறிவை நித்தங் கேளாமல்-மட நெஞ்சே
பந்திக்கு முந்திப் புகுவதுபோல் பாய்ந்துசென்று
வந்தவளைத் தேடாதே கேள்..!!

அந்திக்குத் தத்தித்தத் தித்தாவும் பறவைபோல்
மந்திக்கு மறுவடிவாய்க் கிளைதாவும் மனமே நில்..!!
சிந்திக்க மறந்துசில் வண்டாகிரீங் கரித்து
தந்தியனுப் பிடாதே கேள்..!!

உந்தியுந் தியேயுற வாடிடத் தள்ளினும்..
தொந்திநி றைந்துவிட்டால றுசுவையு மறியாது..
ஐந்திரண்டு திங்களிற் றத்தனையுங் கசக்குமே..
இந்திரிய மடக்கிவாழ் கேள்..!!

"

பேயாயுழலுஞ் சிறுமனமே என்ற கருத்தினால் எம்
கருத்தில் உதித்த‌ பாடலிது..!!
மனம் ஒரு மரம்விட்டு மரம் தாவும் குரங்கு ..!!
அதைக் கட்டுக்குள் வைத்திருப்பவனே மனிதனாகவும்,
பின்னாளில் மகானாகவும் ஆகிறான்..!!
நன்றி..!!!


அன்பன்.,
க.அண்ணாமலை.,

திங்கள், 22 பிப்ரவரி, 2010

தமிழன்னை..!!

"
செந்தமிழ் செம்மொழியாய் ஆனபின்னும்
வந்த மொழி பேசுகின்றார் - வழக்கொழிந்து
எந்த வ‌ழி என்றுசொல் லாம‌ற்போமோ..
எந்தை தாயுமென‌க்குரைத்த அன்புமொழி..!!

இந்த புவி மீததனில் இன்பங்கொண்டே
அந்த நாள் தொட்டு நாமுரைத்து வந்தோம்..!!
கந்தலாய்ப் போன சிறு மொழிகளாலே
காலதேவன் கையிற்தமிழ் சிக்கிடுமோ..!!

வட்டம் விரிவாக வேண்டும் நமக்குள்ளேயே..!!
வாதிட்டு தமிழை வளமாக்கல் வேண்டும்..!!
பட்டம் நூறு பெறுவதனால் பயனுமில்லை..!!
பெற்ற தாய்க்கீடாய்ப் பிறபெண்கள் ஆவதில்லை..!!

நட்டநடு ஆற்றினிலே விட்டகொடியல்ல தமிழ்..!!
எட்டுமருங் கெங்குமிளங் காற்றாக உலவுந்தமிழ்..!!
கொட்டியிசை எழுப்பியெமை குதிகொள்ள வைக்குந்தமிழ்..!!
வெட்ட வெட்ட தமிழ்மாந்தர் நெஞ்சம்தனில் வளருந்தமிழ்..!!

"

அன்பன்.,
க.அண்ணாமலை..!!
..

மழை..!!

"
வானம் வந்துதிரும் வரப்புகளி ரண்டுபடும்..!!
பாணம் போலவிழும்..பசிதீர்த்து வைக்கும்-பெரு
ஆனை போலிருக்கு மேகந்தரு மழையாலே..
தானந் தவமிரண்டும் தங்காமல் நடந்திடுமே..!!


அன்பன்.,
க.அண்ணாமலை..

சனி, 20 பிப்ரவரி, 2010

மீனாட்சி பாமாலை..!!

"
சந்தன மேனியில் சிந்தை நிறைந்திட..
சங்குக் கழுத்தினில் சந்தம் பதிந்திட..
வந்தவர் யாவரும் நின்று பணிந்திட..
வெந்தவர் நொந்தவர் வந்து வணங்கிட..!!

எத்தரும் பித்தரும் உடனரண் டோடிட..
சித்தரும் முத்தரும் கவிபல பாடிட..
அத்தரும் அலருமாய் மேனி மணத்திட..
நித்தமுன் புகழை நான் கூறிடவே..!!

உத்தரவொன்று எமக்கு நீ அருள்வாய்..
நித்திரையின்றி உனைநிதந் தொழவே..
பத்தரை மாற்றுப் பசும்பொன் அங்கம்..
சித்திரை மாதத்து வெயிலையும் மிஞ்சும்..!!

தித்தித்து நினைவிற் தேனாய் உருளும்..
முத்துப்பற்கள் இளநகையை உமிழும்..
எத்திசை நோக்கினும் பக்தர்கள் திரளும்..
சத்தெனக் கருள்வாய் சாவிலு முனைப்பாட..

கண்களிற் கண்டேன் காலைச் சூரியன்..
பண்களிற் கண்டேன் பரவிடுமுன் புகழ்..
எண்களிற் கூறவு மியலுமோ உன்திரு..
தண்புகழ் தனையே தளராமற் தருவாய்..!!

சித்தி அளித்திடும் சிலவரம் வேண்டேன்..
முத்தி அளித்திடும் முறைமையும் வேண்டேன்..
பத்தி நிறையவுனைப் பரவசமாய்ப் பாடத்..
தத்தித் தொடர்ந்தால் தனதுயிர் வாழும்..!!

கண்டவர் கண்டிடத் தோன்றும் உருவம்..
காலனின் காலைச் சுற்றிய அரவம்..
வென்றிட வேண்டியே இங்கு நாம் வருவோம்..
நின்றிடம்மா நித்தம் என்மன வீட்டினில்..!!

மீனாட்சி பாமாலை மிகையற்ற பூமாலை..
தானாக வரவில்லை தகவலேதும் சொல்லவில்லை..
ஏனோ தோன்றியது எழுதிவைத்தேன் பாக்களிலே..
தேனாகப் பாய்கிறதே தேவியைப் பாடுபவை..!!

"
அன்பன்.,
க.அண்ணாமலை..!!
..

வியாழன், 18 பிப்ரவரி, 2010

தமிழ்ப்பாக்கள் வடித்திடவே....!!!!!

"
தெள்ளுற்ற தமிழமுதிற் பாக்கள் நூறு ..
தெளிதேனிஞ் சுவையுடனே ஆக்கஞ் செய்ய ..
அள்ளிப் பருகிடவே தேவையில்லை அலைகடலும்..
உள்ளத்திற் தமிழ்வியந்து உருசெய்க தானேவரும்..!!
"
அன்பன்
க.அண்ணாமலை..